மன்னை முத்துக்குமார்

கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.

ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.

இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.

பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

IndiaPakisatan ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.

தமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.

1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.

ஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:

1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள்குழு 1
7. பொருளாதார உறவுகள்குழு 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10. ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.

1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.

இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:
1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்

வங்காள பவுண்டரி கமிஷன்:
1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.

இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.

1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.

ஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.

இடம்பெயர்தல்:

நடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.

ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
India2pak-train
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.
''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''

பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:

""பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.

காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.

நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?

ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.

பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.

உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.

அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.

வசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..



India2pak-kafila இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.

எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.

எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?

ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.

பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.

குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.

"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.

அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்?:

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

Violence 1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.

பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)

1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

Communal violence ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.


பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.

"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.

"அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

"அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.

தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.

தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

--------ச. தமிழ்ச்செல்வன்

மன்னை முத்துக்குமார்
.
1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா

உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.
‘இந்து பத்திரிகை’

44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை பரவரோடு
குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)
மன்னை முத்துக்குமார்
---------------------- விடுதலைக் களம் - மேலவளவு நினைவிடம்

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை, சாதியப் போராட்டமாகவே உள்ளது. 1968 இல் தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டம், ஆண்டைகளின் சாதியத்தையும் மேலாதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. சாதிய அமைப்பின் அடித்தட்டிலுள்ள தலித்துகள் தங்களை எதிர்த்ததை செரித்துக் கொள்ள இயலாத, மேல்சாதியென கர்வம் கொண்ட ஆண்டைகள், இரக்கமற்ற முறையில் 25.12.1968 அன்று நடைபெற்ற கலவரத்தில் உயிர் தப்பிக்க, ஒரு சின்னஞ்சிறு குடிசையில் ஒடுங்கிய 44 தலித்துகளை தீயிட்டு எரித்துக் கொன்றனர்.

இவ்விரக்கமற்ற படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண (நாயுடு)வும் பிறரும் 1970 இல் குற்றவாளிகள் என நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண (முதலியார்) தீர்ப்புரைத்தபோதும், “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று கூறி, 1975இல் வழக்கிலிருந்து விடுதலை செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகராஜன். “ஏழைச் சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்வழக்கு எவ்வளவு உண்மையானது என்பதை அனைவரும் உணர்ந்த தருணம் அது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. கால வெள்ளத்தின் ஓட்டத்திலும் நீதி மனம் கொண்டவர்களுக்கு, அது ஓர் ஆறாத வடுவாக என்றும் நெஞ்சில் நிலைப்பெற்றிருக்கிறது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த தலித்துகளின் விடுதலை உணர்வு, 1989 இல் ‘பட்டியல் சாதியினர் மற்றும பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம்' இயற்றப்பட்ட பின்னணியிலும், அதன் பின்னர் 1990 இல் தொடங்கிய மாமனிதர் அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் வலுவடைந்தது. 1992 இல் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் தொடர்பான 73 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதை நடைமுறைப்படுத்த இயற்றப்பட்ட மாநிலப் பஞ்சாயத்து சட்டங்களும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தின.

தமிழகத்தில் 1994இல் இயற்றப்பட்ட தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டப்படியான ஊராட்சி அமைப்புகளின் தேர்தல், 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட அளவிலான ஊராட்சி அமைப்புகளில் தலைவர் பதவி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வகையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது நாள்வரை தலைவர் பதவியை அனுபவித்து வந்த அம்பலக்காரர் சமூகத்தினர் இந்த ஒதுக்கீட்டை ஏற்க மறுத்தனர். தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது,

இரண்டு முறை அம்பலக்கார சமூகத்தினர் கலவரம் ஏற்படுத்தி தேர்தல் நடைபெறவிடாமல் தடுத்தனர். இதில் ஒருமுறை வாக்குப் பெட்டியையே தூக்கிச் சென்றுவிட்டனர். மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் தலித் மக்களைப் பங்கேற்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு உறுதியளிப்புகளுடன் வேண்டியதன் பேரில் போட்டியிட்ட முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய தேர்தல் கலவரத்தில் ஆதிக்கச் சாதியினரால் தீ வைத்து பாழ்படுத்தப்பட்ட தலித் மக்களின் குடிசை வீடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, 30.06.1997 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு மேலவளவு நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், முருகேசனின் தம்பி ராஜா உட்பட 6 பேர் மேலவளவுக்கு அருகே நெருங்கும்போது, பேருந்தை வழிமறித்த 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய அம்பலக்காரர்களின் வன்முறைக் கும்பலால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.

முருகேசனின் தலை தனியே துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. “தலை இருந்தால்தானே தலைவனாக இருக்க முடியும்; தலைவனாக வரும் எந்த தலித்தின் தலையும் தப்பாது” என்பதுதான் கொலையாளிகளின் செய்தியாக இருந்தது.

இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் என 40 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முன்பும், வழக்கு விசாரணையின்போதும், அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அம்மேல் முறையீடுகளின் மீதான விசாரணையின்போதும் இவ்வழக்கை வலுவிழக்கச் செய்ய ஆதிக்க சாதியினர் கையாண்ட சூழ்ச்சிகள் பலப்பல. அவர்களின் பொருளாதார, ‘சமூக' பலம் இச்சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்தது.

நீதித்துறையும் இச்சூழ்ச்சிகளுக்குத் தப்பவில்லை. இச்சூழ்ச்சிகளையெல்லாம் காலவரிசைப்படி தொகுத்து விளக்கி வழக்குரைஞர் குழு ‘நீதியைத் தேடும் மேலவளவு வழக்கு' என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை, தலித் முரசில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில் 17 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 23 நபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் 26 சூலை 2001 அன்று தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 17 நபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தனர்.

வழக்குச் சம்பவத்தில் காயமடைந்த தலித் மக்களின் சார்பில் 23 நபர்களின் விடுலையை எதிர்த்தும், அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சார்த்தப்பட்ட ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை' என்ற விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தும் குற்றவியல் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை ஒருங்கே விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி. சதாசிவம் (தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் என். பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய ஆயம் 19.04.2009 அன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

வழக்கில் விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், இப்படுகொலை சாதியப் பகைமையின் பின்னணியில்தான் நிகழ்ந்துள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும், விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தண்டிக்காமல் விடுவித்தது. இது குறித்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யாததாலும், சம்பவம் நிகழ்ந்து முழுமையாக 9 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்நிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட விரும்பவில்லை என்று கூறி உயர் நீதிமன்றம், காயமடைந்தோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 17 குற்றவாளிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர் 22.10.2009 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம், உயர் நீதிமன்றம் உறுதி செய்த விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து, குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வழக்கில், சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் வரிசை எண்ணில் முரண்பாடு இருப்பதால், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை முன்நிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுத் தரப்பு முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டதால், வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொய்யாகத் தயாரிக்கப்பட்டதாகவும் எனவே, வழக்கின் அடிப்படையே அய்யத்திற்குரியதாக உள்ளதாகவும் தண்டிக்கப்பட்டோர் சார்பில் வாதிடப்பட்டது.

முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற படுகொலை என்ற அடிப்படையிலும், இச்சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய குழப்பச் சூழ்நிலையையும், இப்படுகொலை ஏற்படுத்திய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, முதல் தகவல் அறிக்கைப் புத்தகம் முன்னிலைப்படுத்தப்படாத ஒரே காரணத்திற்காக இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதம் சரியல்ல; ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் இவ்வாதத்தை நிராகரித்துள்ளது.

மேலும், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத சூழ்நிலை மற்றும் காரணங்களை விளக்கி, காவல் துறை உயர் அலுவலர் ஆணையுறுதிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை உள்நோக்கத்துடன் மறைத்து வைத்திருக்கவும் வாய்ப்புள்ளபடியால் இத்தகைய வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், குற்ற சம்பவம் நடைபெற்றது குறித்து வருவாய்த் துறை அலுவலர்களான மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர், அரசுக்கு அனுப்பியிருந்த அறிக்கைகளில் சில குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறாததால், அவர்கள் பின்னர் பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

வருவாய்த்துறை அலுவலர்கள் புலன் விசாரணை அதிகாரியுடன் இணைந்து செயல்பட்டு அந்தப் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த அறிக்கையை கருத முடியாது என்று கூறி, இவ்வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

கீழ்வெண்மணி வழக்கிலிருந்து மேலவளவு வழக்கு வரையிலான நீதிக்கான பயணம் நீண்ட நெடியதாகவும், பல்வேறு எதிர்ப்புகளையும் சவால்களையும் துரோகங்களையும் சந்தித்தாக அமைந்துள்ளது.

கீழ்வெண்மணி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள் திறம்பட செயல்பட்டபோதிலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு மேலெடுத்துச் செல்லப்படவில்லை. ஆனால், மேலவளவு வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலிருந்து விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன.

அவை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர். வெங்கட்ரமணியின் அலுவலகம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிற்சில காரணங்களினால் அம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தனியாக இனி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேபோல், மேலவளவு வழக்கில், தொடக்கக் கூட்டம் முதலே, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தின் ஒருங்கிணைப்பில் சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கத் தோழர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட மேலவளவு பகுதி மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழக்கை இந்த அளவில் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆளுங்கட்சி மாற்றங்களுக்கிடையேயும்கூட அரசுத் தரப்பு இவ்வழக்கில் போதிய குறைந்தபட்ச முனைப்பைக்கூட காட்டவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும், அரசுத் தரப்பில் முன்னிலையான சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்று, இப்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றும் வி. கனகராஜ் அவர்களை நியமித்தது பெரும் நல்வாய்ப்பாக அமைந்ததைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அவரது சமூக அக்கறை உணர்வும் இவ்வழக்கில் பெருமளவுக்குத் துணை புரிந்துள்ளது. இந்த சட்டப் போராட்டத்தில் பங்களித்த அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியவர்கள் என்பதோடு, மேலவளவு வழக்கின் முடிவு இனிவரக்கூடிய காலங்களில் வன்கொடுமை வழக்குகளுக்கான போராட்டத்தின் தொடக்கமே என்பதை உணர்ந்து சமூக, மனித உரிமை, தலித் உரிமை ஆர்வலர்களும் செயல்பாட்டாளர்களும் செயல்பட உறுதி ஏற்பதே மேலவளவு தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாக அமையும்!

மேலவளவு வழக்கில் பங்களித்தோர்

மேலவளவு வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக நடத்த, அவர்களது கோரிக்கைப்படி நியமிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பி. திருமலைராஜன், சிறப்பு அரசு குற்றத் துறை வழக்குரைஞராகவும், அவருக்கு உறுதுணையாக இன்னொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையைத் திறம்பட நடத்தினர். வழக்கின் சாட்சிகளுக்கு வழிகாட்டியும் ஊக்குவித்தும் வழக்கை வலுவடையச் செய்த வழக்குரைஞர்கள் கு.ஞா. பகத்சிங் மற்றும் ரா. அழகுமணி அவர்களுடன் சென்னகரம்பட்டி பெருமாள், மேலூர் தேவனாண்டி ஆகியோரும் சாட்சிகளுக்கு துணிவூட்டினர்.

வழக்கு விசாரணை சேலத்தில் நடைபெற்றபோது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊக்குவித்தவர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக கட்டணமின்றி முன்னிலையாகி வாதாடியவர், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் வி. கோபிநாத். வழக்கு விபரங்களில் அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள் வழக்குரைஞர் டாக்டர் வி. சுரேஷ் மற்றும் வி. கோபிநாத் அவர்களின் இளம் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்தியன். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

Bookmark and Share

மன்னை முத்துக்குமார்
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
.

_______மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை.

அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.ஆனால், கடவுள் அப்படி அல்ல;
ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது.

அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது,

நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம.

ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.
மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்;

அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது?

படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்."சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள் ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது.

மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.
இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950– ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940– ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100– க்கு 9– பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50– பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

இது தான் கடவுள் இரகசியம்."விடுதலை" - 03-11-1970 நாளிதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.
மன்னை முத்துக்குமார்
.
மன்னை முத்துக்குமார்
.
ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.
பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை.

ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம்.


அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்’ என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை .

இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல்

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

—— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து – பக்கம் 215-216


மன்னை முத்துக்குமார்
ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்



‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.

ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 29.5.1932
மன்னை முத்துக்குமார்
.
ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது



ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953
மன்னை முத்துக்குமார்
.
தலித்துகளுக்கான சட்ட உதவிகள் : குறைபாடுகளும் தீர்வுகளும்



தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவும், மதுரை "சோக்கோ' அறக்கட்டளையும் இணைந்து, 18.7.2009 அன்று மாநில அளவிலான கருத்துக் கேட்பு நிகழ்வை நடத்தியது. இது "தலித்துகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கான சட்ட உதவி' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஓர் அமர்வு "தலித்துகளுக்கான சட்ட உதவி' என்ற தலைப்பில் அமைந்தது. இந்த அமர்வை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன் தலைமையேற்று நடத்தினார். கருத்துரையாளர்களாக வழக்குரைஞர் பொ. ரத்தினமும், சு.சத்தியச்சந்திரனும் பங்கேற்றனர். அந்த அமர்வில் சு. சத்தியச்சந்திரன் அளித்த கருத்துரையின் தமிழாக்கமே இக்கட்டுரை.

சமூகத்தில் நலிவுற்ற மக்கள் சமமான நீதி பெறுவதை உறுதி செய்யும் வகையில் "சட்ட உதவி' என்ற கொள்கையை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக அமைந்துள்ள "அரசு வழிகாட்டு நெறிகள்' தலைப்பின் கீழ் பிரிவு 39 சேர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவை அல்ல. இருப்பினும். 1990 ஆண்டில் இந்தியத் தலைமை நீதிமன்றம் கிஷோர்-எதிர்-இமாச்சலப் பிரதேச அரசு (AIR 1990 SC 2140) என்ற வழக்கில், “சட்ட உதவி என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மற்றும் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றிக் கொள்ளத்தக்க ஒன்றாகக் கருதப்பட வேண்டும்'' என்று கூறியது.

சுக்தாஸ்-எதிர்-அருணாசல யூனியன் பிரதேசம் (AIR 1990 SC 2140) என்ற வழக்கில், “சட்ட உதவி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை போன்று கருதப்பட வேண்டும்'' என உச்சநீதிமன்றம் பொருள் விளக்கம் அளித்தது. மேலும், அதிக பட்ச தண்டனைகளான ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் ஒரு நபர் மீது சுமத்தப்பட்டிருந்து, அந்த நபர் தன் தரப்பு வாதங்களை எடுத்துச் சொல்வதற்கு ஒரு வழக்குரைஞரை தனது ஏழ்மை காரணமாக நியமிக்க முடியவில்லையெனில், அவருக்கு சட்ட உதவியினைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், நமது அன்றாட நடைமுறையில் சட்ட உதவி என்ற உரிமைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதன் காரணமாக சட்ட உதவி என்ற உரிமையானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 39 A ஆக சேர்க்கப்பட்டு, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்தியாவில் மற்றொரு சட்டப்புனைவாகவே (Legal Fiction) நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சட்ட உதவிக்கான இயக்கம் :-

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்ட உதவிக்கு வகை செய்கின்ற பிரிவு 39அ சேர்க்கப்படுவதற்கு முன்னரே தமிழகத்தில் நாம் பெருமை கொள்ளும் வகையில், சட்டஉதவிக்கான இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாக உருவானது. 19.11.1976 அன்று "தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்' தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இது சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த நீதிபதிகளில் ஒருவரான திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் கருத்தாக்கம் செய்யப்பட்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. வி.ஆர். கிருஷ்ணய்யரின் முழு முயற்சியாலும், தீவிர ஈடுபாட்டாலும் தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்திற்கான குறிக்கோள்களும், நோக்கங்களும் மிகுந்த கவனத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் வடிவமைக்கப்பட்டன. ஏழைகளுக்கும், தகுதியானவர்களுக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, பல்வேறு சட்டங்களின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிமையியல் உரிமைகள் (Civil Rights) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்கள் தொடர்புடைய சட்டங்கள் குறித்து கருத்துப் பரவல் நிகழ்த்த ஏற்பாடு செய்தல், குறிப்பாக, விவசாய சீர்திருத்தங்கள், குறைந்தபட்சக் கூலி, தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், விவசாயிகள், கொத்தடிமைத் தொழிலாளர்கள், கடன்பட்டோர் ஆகியோரின் நலனில் சிறப்புக்கவனம் செலுத்துதல்; அவர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் சட்ட உதவிகள் வழங்குதல்; அறிவார்ந்த வழக்குரைஞர்கள், சட்ட மாணவர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து, சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்க ஊக்குவித்தல்; சட்டங்கள் மற்றும் நடைமுறைச் சட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு, சட்டம் தொடர்பான அறிவினைப் பரப்புதல் போன்றவை அவற்றில் ஒரு சில (தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் துணை விதி-3).

2. மேற்சொல்லப்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது, சமூகத்தில் பின்தங்கிய மக்கள் மீதான முழுமையான வலியுறுத்தல் இவற்றில் உள்ளதைக் காணலாம்.

3. சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் இருந்த காலகட்டத்தில், அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றில் உண்மையான அக்கறை கொண்ட சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுப்பினராவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டதால், எங்களைப் போன்ற பலர் பதிவு செய்யப்பட்ட சங்கமான அக்கழகத்தில் உரிய சந்தா செலுத்தி ஆயுட்கால உறுப்பினர்களானோம்.

4. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 39 A சேர்க்கப்பட்டது, தமிழகத்தில் தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் சட்ட உதவிக் கொள்கைக்கும் இயக்கத்திற்கும் தூண்டுதலாக அமைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மீ. ராஜா, அக்கழகத்தின் செயலாளராக பின்னர் நியமிக்கப்பட்டார். அவர் தமிழகத்தில் சட்ட உதவி இயக்கத்தின் மறுபெயரானார். அவருடைய பணிக்காலத்தில் அக்கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு முழு அளவில் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அக்கழகத்தின் வழக்குரைஞர் குழுவில் இருந்த வழக்குரைஞர்களை பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது என்பது மட்டுமின்றி, சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தகவல்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகளில் உதவிடவும் ஊக்குவித்தார். அதனால், அக்கழகமே மனுதாரராக இருந்து பல பொது நல வழக்குகளை சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவித்தல், சிறை மற்றும் காவல் பாதுகாப்பு ஆகியவற்றில் நடைபெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெறுவதற்கு உதவியதும் அவற்றில் ஒரு சிலவாகும்.

5. மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள், வழக்கு நடத்திய வழக்குரைஞரின் பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தன. இது, மோசடிகள் நடைபெறத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் முயற்சியால், இழப்பீட்டுத் தொகை காசோலை மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பெயரிலேயே வழங்கப்பட்டது. இந்த ஒரு தனி முயற்சி எண்ணிலடங்காத பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய பலன் அளிப்பதாக இன்றளவும் அமைந்துள்ளது.

6. அக்கழகத்தின் செயலாளராக செயல்பட்டு வந்த திரு. ராஜா, தொடர்ச்சியாக தனக்குக் கீழ் அமைந்திருந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான சட்ட உதவி மய்யங்களுக்கு கடிதங்கள், சுற்றறிக்கைகள் அனுப்பி, அவற்றில் நலிவடைந்துள்ள மக்களின் நலன்கள் தொடர்பான புதிய சட்டம் அல்லது தீர்ப்பு ஆகியவை குறித்து அம்மய்யங்களின் கவனத்திற்கு கொணர்வதுடன்-அவ்வகையிலான சட்டம் அல்லது தீர்ப்பை பின்தங்கிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில்-எவ்விதம் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தினார். அத்தகைய சுற்றறிக்கைகளையும், கடிதங்களையும் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் மிகுந்த கவனத்துடனும் அவர் வடித்தார்.

7. சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு பயன்படத்தக்க சட்டங்களை, தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் அவ்வப்போது வெளியீடுகளாகக் கொணர்ந்தது. பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பிறப்பைப் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அரசின் அரசாணைகள், நடைமுறை விதிகளைத் தொகுத்து புத்தகமாக அக்கழகம் வெளியிட்டது.

8. தலித் மக்களுக்கான சட்ட உதவி உரிமை என்ற வகையில் பார்க்கும்போது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995, அய் இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட உடனே அக்கழகம் அதை சிறிய புத்தகமாக வெளியிட்டது. இந்த துணிச்சலான முயற்சியை அரசோ அல்லது எந்த ஒரு தனியார் வெளியீட்டு நிறுவனமோ செய்வதற்கு முன்பே அக்கழகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நாட்டில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கிய அக்காலகட்டத்தில் அந்த வெளியீடு, தலித் உரிமைகள் குறித்த ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

9. பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் விரும்பும், அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரை தேர்வு செய்து கொள்ள, தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளித்தது. இந்தக் குழுவின் வழக்குரைஞர் (கஞுணச்டூ Penal Advocate) என்ற முறையில் சமூகத்தில் மிகவும் அடித்தளத்தில் உள்ள அதிக அளவிலான ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தலித் மக்களுக்கு சட்ட உதவிகளை நானும் வழங்கி இருக்கிறேன்.

அவற்றில், ஒரு வழக்கில் 1999இல் காவல் நிலையத்தில் மரணம் அடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அண்மையில், (நவம்பர் 2008) இழப்பீடாக அய்ந்து லட்சம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே. சந்துரு, “சட்ட உதவிக் கழகம் இந்த வழக்கை பொது நலனில் அக்கறை உள்ள வழக்குரைஞரிடம் ஒப்படைத்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். இது, அக்கழகம் அவ்வகை வழக்குகளில் எவ்வாறு சிறப்புக் கவனம் கொண்டது என்பதைக் குறிப்பதாகவே உள்ளது.

10. இவை மட்டுமின்றி, மனித உரிமைகள் மீறப்படுவதால் பாதிக்கப்படும் மக்கள் தங்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெறும் வகையில், அக்கழகத்தின் பட்டியலில் இருந்த வழக்குரைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று அவர்கள் குறைகளுக்கு நிவாரணம் பெற உதவி புரிவதை அக்கழகம் ஊக்குவித்தது. இதுபோன்ற நேர்வுகளில், குறிப்பிட்ட வழக்குரைஞர் சட்ட உதவிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், சான்றளிக்கப்பட்ட மற்றும் ஏற்பளிப்புக் கடிதங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்புடைய வழக்கின் ஆவணங்களை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பெறுவதில் இத்தகைய கடிதங்கள் பெரிதும் உதவியாக அமைந்தன. தகவல் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் இதுபோன்ற கடிதங்கள் வழக்குகளுக்காக ஆவணங்களைப் பெறுவதில் மிகவும் உதவியாக அமைந்தன.

சட்டப்பணிகள் ஆணைக் குழு சட்டத்தின் வருகைக்குப் பின்பு :

1. சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் (Legal Services Authority Act) நாடாளுமன்றத்தில் 1987இல் சட்டமாக இயற்றப்பட்டது. இருப்பினும், பரவலான அறிவுரைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்பு 9.11.1995 அன்றுதான் அச்சட்டத்தின் மூன்றாம் பகுதி (மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தொடர்பானவை) தவிர மற்ற சட்டப் பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 6.3.1997 அன்று மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு தொடர்பான சட்டப்பிரிவுகள் நடைமுறைக்கு கொணரப்பட்டன.

2. இச்சட்டத்தின் நோக்கமாக, “பொருளாதார அல்லது பிற இயலாமையின் காரணமாக எந்த ஒரு குடிமகனுக்கும் நீதியை பெறும் வாய்ப்பு மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து, சமூகத்தின் நலிவடைந்த பிரிவு மக்களுக்கு இலவச மற்றும் தரமான சட்டப்பணிகள் வழங்கிட சட்டப்பணிகள் அமைப்புகளை உருவாக்கவும், நீதி பெறுவதற்கான சமவாய்ப்பு என்பதன் அடிப்படையில் சட்ட அமைப்பின் செயல்பாட்டை உறுதி செய்ய மக்கள் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்தவும்'' என்று அதன் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.

3. இச்சட்டத்தின் பிரிவு 4இன் கீழ் சில பாராட்டத்தக்க நோக்கங்கள் இச்சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட, மத்திய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் என்று தலைப்பில் முன்வைக்கப்பட்டாலும் கூட-மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களுக்கு இந்த அடுக்கமைவு முறையில் (hierarchy) அச்செயல்பாடுகள் பொருந்தத்தக்கவை என்ற போதிலும் சட்ட உதவி என்ற கொள்கை, அதன் சாரத்தில் இப்புதிய அமைப்பில் நமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவே அமைந்துள்ளது.

4. ஏற்கனவே எண்ணற்ற வேலைகளையும் பொறுப்புகளையும் நீதிபதிகள் நிறைவேற்றி வரும் சூழலில் சட்ட உதவிகள் இயக்கத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் சவால்களை சமாளிப்பது அவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது. இதன் காரணமாக, சட்ட உதவிகள் இயக்கமானது மெதுவாகவும், படிப்படியாகவும், பல்வேறு நீதிமன்றங்களின் முன்பு நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்த்து முடிப்பதற்கான மக்கள் நீதிமன்றங்களாக (Lok Adalats) மாற்றமடைந்துள்ளன.

5. அதிக அளவிலான எண்ணிக்கையில் வழக்குகள் தொடரப்படுவதால், நீதித்துறையின் முதுகில் மலைபோல் குவிந்து கிடக்கும் வழக்குகளைக் குறைக்கவும், ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைக்க இசைவுத் தீர்ப்பாய முறை கண்டுபிடிக்கப்பட்டதாலும், 2002ஆம் ஆண்டில் சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டத்தில் பகுதி V-A சேர்க்கப்பட்டு, பிரிவு 22-B இன்படி நீதிமன்றத்தில் வழக்கிடுவதற்கு முன்பே சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதற்கான நிரந்தர மக்கள் நீதிமன்றங்களை (Permanent Lok Adalats) ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதனால் சட்ட உதவிகள் இயக்கமானது, வெறுமனே வழக்குகளை முடிக்கும் ஒரு எந்திர அமைப்புச் சாதனமாக (Case Disposal Mechanism) மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் உயர் நீதிமன்ற அளவிலும் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் கைவிடப்பட்டன.

6. இதன்பிறகு, சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் பார்வையை பின்னோக்கி செலுத்தவில்லை. அவை மூன்று முக்கிய செயல்பாடுகளை செய்யத் தொடங்கின. அவை: 1. மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல் 2. பெரிய மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல் 3. கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் போல் மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல். சட்டப் பணி குழுக்கள், சட்டம் எதிர்நோக்கிய சட்டப் பணிகள் வழங்குவது என்ற கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

7. அன்றாட நீதிமன்றப் பணிகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க வேண்டும் என்ற பணியழுத்தம் காரணமாக, மக்கள் நீதிமன்றத்திற்கு வழக்குகள் மாற்றப்படுகின்றன. உயர் நீதிமன்ற அளவிலும் மக்கள் நீதிமன்றங்கள் படோபடமாக நிகழ்த்தப்படுகின்றன.

8. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் நிறைவின்போது பேசிய நீதிபதி திரு. பி.டி. தினகரன் பின்வருமாறு கூறினார் : “ஒரு வழக்காடி (Litigantt) அளித்த புகார் 3 மணி நேரத்திற்குள் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதிமன்றத்தின் வெற்றி'' என்று குறிப்பிட்டார்.

9. குற்ற நிகழ்வு தொடர்பான புகார்களை காவல் துறையினர் குற்ற வழக்குகளாகப் பதிவு செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482 இன் கீழ் உயர் நீதிமன்றத்தின் உள்ளியல் அதிகாரத்தை (Inherent Power) பயன்படுத்தக்கோரி, ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 20 வழக்குகள் குற்றவியல் அசல் மனுக்களாகத் தாக்கல் செய்யப்படுகின்ற சூழலில் தான் மேற்கூறியவாறு நிகழ்ந்தது. இன்றுவரை இந்த எண்ணிக்கை குறையவே இல்லை, கூடியபடியே உள்ளது.

10. சுனாமி பேரழிவுக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ள நானும் மற்றும் சில வழக்குரைஞர்களும் பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்), பட்டினப்பாக்கம் (சென்னை) மற்றும் கல்பாக்கம் (காஞ்சிபுரம்) ஆகிய பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய ஒரு குழுவாக முன் வந்தோம். இதற்காக, அரசு மற்றும் பிற அலுவலர்களை அணுகி உரிய உதவிகளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகச் செய்ய ஏற்பளிப்புக் கடிதம் (Accredition Letter) வழங்கக் கோரி தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுத்தோம். அப்போது மாவட்ட நீதிபதி தகுதியில் அவ்வாணைக் குழுவிற்கு உறுப்பினர்-செயலாளராக நீதிபதி திரு. எம். ஜெயபால் இருந்தார். எங்களிடம் எவ்விதத் தெளிவையும் கோராமலேயே, கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நாங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்தானா என்பதை பரிசோதித்து, அதன்பின்பு தேவைப்பட்டால் அவ்வாறான கடிதத்தை அம்மாவட்ட ஆணைக்குழு வழங்கும் என்று கூறி, எங்கள் கோரிக்கையை நிராகரித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருபவர்களான எங்களின் நம்பகத் தன்மையை, செங்கல்பட்டு சட்டப் பணிகள் ஆணைக்குழு எவ்வாறு பரிசீலிக்க முடியும் என்பது குறித்து நாங்கள் வியப்புற்றோம். இத்தகைய அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமலிருப்பதே நல்லது.

11. மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் பயனடைபவர்கள், வணிக நிறுவனங்களும், வசதி கொண்டோரும், வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் மட்டுமே. தீர்க்கப்படவேண்டிய நியாயமான குறைகளுடன் வழக்கினை கொண்டு செல்பவர் தனது எதிர்பார்ப்பினை வெளியிட முடியாமல் ஊமையாக்கப்படுகிறார்.


மன்னை முத்துக்குமார்
.
குடும்ப கட்டுப்பாடு குறித்தான பெரியாரின் பார்வை :--
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
.

இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்......
இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.

அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.

சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று எழுதிய தலையங்கம்)
மன்னை முத்துக்குமார்
.

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.

ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 21.4.1945