மன்னை முத்துக்குமார்

 
ஒரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி
ஒரு சூழல் வருகிறது. பறவை

க்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதை