கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை...
  | 
  | 
மொத்த விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பாக பரப்புக்கு மேல் ஜமீன்முறை ஆட்சியில் இருக்கும் இந்தச் சேலம் ஜில்லாவில், முதல் முதலாக இன்று - இங்கு, ஜமீன்தாரர் அல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது, எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம், இம்மாதிரியாகப் பல அல்லாதார்கள் மாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கிறது. இன்னும் இதுபோலவே பல மாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகாநாடுகள், அடிக்கடி கூட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு - அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்...
புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563 இல் பிறந்தவர். காரல் மார்க்ஸ் கி.பி. 1818 இல் பிறந்தவர். மார்க்ஸ் புதிய தத்துவமான அரசியல், அரசியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறையை அமைத்துத் தந்தவர். மாறாக, புத்தர் ஒரு மதத்தைத் தோற்றுவித்ததைவிட அதிகம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் துளியும் தொடர்பில்லாதவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது... நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் அழைக்கும் போது என்னால் வர இயலவில்லை. எனவே, நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். என்னுடைய உதவியின்றி, என்னை அதிகம் சார்ந்து நிற்காமல், நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம்  மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை  எப்படிப் புரிந்து கொண்டாலும்,
 தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது  என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா  விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர  முடியாமல் போய்விடும்.
தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில்  எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில்,  உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால்,  உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று  சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது  எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று  கருதுகிறேன்.
இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப்  பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி  இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு  மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு  எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன்  தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்  என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக்  கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.
அவர்களுடைய கோபத்திற்கான  காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது,  அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல.  இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த  பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை  வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத  ஒன்றாகும்.
காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு  வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில்  இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும்  தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல்  தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள்  எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.
இது  குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின்  கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை  குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க  வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக  வேண்டும்.
இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை,  இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை  அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும்  அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும்  வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க  வேண்டியிருக்கிறது.
முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம்  காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய  உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த  இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட  பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி,  நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள  முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள்  ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும்  பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப்  பெற்றுவிடக்கூடாது.
நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன. உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!
இன்று நாம் மக்களிடையில் பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிகைகளும், குருமார்கள் என்பவர்களும் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதையே முழு மூச்சாகக் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ  நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான  வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய  வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக,  தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக,  குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத்  தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை  ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும்  தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.
ஆனால், இத்தகைய  கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க  வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி  நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள  உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக்  கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக்  கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ,  இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள்  என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக  இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.
தொழிலாளர்களே தங்களது  சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு  நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின்  உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த  முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான்  ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட  முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது  முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு  எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல்,  பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி  இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி  ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது  முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது  செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.
இந்தியாவில் ஒரு  தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு  கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி  செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ  அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம்  கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக,  தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக  மெய்ப்பித்தாக வேண்டும்.
அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட  தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது.  தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது.  அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு  சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும்  தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத்  தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள்  செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட  முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.
ஆகவே, இந்தியத் தொழிலாளர்  சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக  இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி  அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப்  பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க  வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால்,  ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள்  சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.
(அகில இந்தியத்  தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற  கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து)
பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது  மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள்  நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால்,  இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது,  பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும்  உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார  வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம்  விளங்குகிறது.
ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற  தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி  முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன?  தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு  விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில்  பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி,  அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய  முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில்  அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்  என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும்  காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத்  தெரிவிக்கிறான்.
ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில்  தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா'கத்தான்  பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித  உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி  உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர  வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும்.  ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி  போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.
ரயில்வே எழுத்தர் பணிக்குத்  தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த  இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள்,  சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில்  ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்  நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி  வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான்.  தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும்  முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத்  தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான்.  ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்...
எனக்கும்  உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன்.  இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான  குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத்  திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக  பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும்  தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல்  மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள்  மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே  நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு  தவறுகளைச் செய்கிறார்கள்.
மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக்  கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில்  இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர்  தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக்  கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா  வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க  நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை  பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்  ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)

பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள்  உள்ளன: 1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும்  தவிர்த்தல் 2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின்  மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும்  தவிர்த்தல் 3. பொய் சொல்லாமல் தவிர்த்தல் 4. காமம் தவிர்த்தல் 5. மது  தவிர்த்தல்.
உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும்  மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த  அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த  எண்வகைப் பாதையின் அம்சங்கள்:
1. நல்ல கருத்துகள் அதாவது மூட  நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள  மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த
நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது  பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான,  தூய்மையான நடத்தை
5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு  ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7.  விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது,  வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.
உன்னத எண்வகைப்  பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து  மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது  பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக்  கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு  பெறாது.
எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை  ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர்  இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று  குறிப்பிடுகிறார்.
முதலாவது இடையூறு, தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும்  தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும்  என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும்  வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய  பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத்  தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய  பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.
இரண்டாவது இடையூறு,  சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு  ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன்  உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும்  எழுகின்றன.
செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய  தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது, எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற  கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன.  ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப்  பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும்  முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற  முடியாது.
மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும்.  ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும், அவை எவ்வளவு உறுதியாக  இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும்,  புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும்  என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன்  கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன்  வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.
‘பாபாசாகேப் டாக்டர்  அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447 
மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.
பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.
  | 
  | 
பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :
பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி.  இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்தவர். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர்  படைக்குத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக  உயர்ந்தார்.