மன்னை முத்துக்குமார்

கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை...

Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியங்கள் என்ன?


மொத்த விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பாக பரப்புக்கு மேல் ஜமீன்முறை ஆட்சியில் இருக்கும் இந்தச் சேலம் ஜில்லாவில், முதல் முதலாக இன்று - இங்கு, ஜமீன்தாரர் அல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது, எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம், இம்மாதிரியாகப் பல அல்லாதார்கள் மாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கிறது. இன்னும் இதுபோலவே பல மாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகாநாடுகள், அடிக்கடி கூட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

உதாரணமாக, லேவா தேவிக்காரர்கள் அல்லாதார் மாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை அல்லாதார் மாநாடு, வீடுகளின் சொந்தக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு, மேல் சாதிக்காரர் அல்லாதார் மாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மாநாடு என்பன போன்ற பல மாநாடுகள் கூட்டி, இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி, அவற்றை ஒழிக்கச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்.

உலகில் எந்தெந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவத்திற்குத் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக் கட்டைகளும் இருக்கின்றனவோ, இவை எல்லாம் அழிந்தொழிந்து என்றும் தலை தூக்காமலும் இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமுதாயத்திற்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால், தத்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல் வகுப்பார் இல்லாவிட்டால், கீழ் வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி "அல்லாதார்கள்” மாநாடு கூட்ட வேண்டும் என்கிறோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டினோம் என்றால், இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு முன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது. அதற்காகவே நம் இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபச் சங்கங்களும், புதிய முறையில் தோற்றுவித்தும், பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒருவாறு பாமர மக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலை செய்ததன் பயனாய் ஓர் அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள், அதற்குப் பதிலாக அது போன்ற கொடுமையும் மோசமான ஜமீன்தார் ஆதிக்கம் தலை தூக்கித் தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல், ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்து வருகின்றன.

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்குத் தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர்களும் ஆவார்கள். இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்து கவனித்தால், பெரும்பாலும் ஒவ்வொருவருடைய யோக்கியதையும் விளங்கும்.

ஏழைகளும், விவசாயக் கூலிக்காரர்களும் தங்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தினம் 8 மணி முதல் 15 மணி வரையில் வியர்வையைப் பிழிந்து சொட்டு சொட்டாய்ச் சேர்த்த ரத்தத்திற்குச் சமமான செல்வத்தை, ஒரு கஷ்டம் ஒரு விவரம் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள், சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற, வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றிப் பாழாக்குவது என்றால், இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? இவர்களின் தன்மையையும் ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம், சுயமரியாதையை உணர்ந்த சமூகமாகுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மேல் ஜாதி கீழ் ஜாதி முறை கூடாது என்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ, அது போலவேதான் ஜமீன்தாரன் - குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாது என்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்.

(27.8.1933 அன்று சேலத்தில் ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டில் ஆற்றிய உரை)



மன்னை முத்துக்குமார்
.
கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?

கடவுளைப் பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன் என்று ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே, நான் ஏன் கடவுள்களை ஒழிக்கவேண்டுமென்கிறேன்? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே யோக்கியமான அல்லது யோக்கியத்தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே!

அவரவர் சுய நலத்திற்கேற்ப, முட்டாள் தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுளையும், தன் எதிரிகளை ஒழிக்க வேண்டுமென்கிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால் - அவற்றை, அதை - அவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான, யோக்கியமான - அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும்.

கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?

உதாரணமாக ஒரு மனிதன், தான் மற்ற மனிதனை விட மேலான, மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக் கொண்டு, அதற்காகவென்று ஒரு கடவுளையோ, பல கடவுளையோ கற்பித்துக் கொண்டு, அதுவும், அயோக்கியத்தனமான - ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு, “அவைகள் தான் என்னை - எங்களை உயர்சாதியாய்ப் பிறப்பித்தது’’ என்றால், அந்த உயர் சாதியல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழிசாதி - கீழ்சாதியாக ஆக்கப்பட்டவன் அந்த அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை - கடவுள்களை ஒழிக்க - அழிக்க பின்னப்படுத்த முன்வராதவன் அறிவாளியாவானா? மனிதனாவானா? மானமுள்ளவனாவானா? தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியுடையவன் ஆவானா?

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே? அவர்களை எதற்காக கடவுள் ஏற்பட்டது - அதனால் உனக்கு என்ன பலன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்? அவன் ஏதாவதொரு பதிலைச் சொல்வானானால் அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா - மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா என்றால் என்ன பதில் சொல்வான்? மகிழ்ச்சி, நலம் மேன்மையடைந்திருக்கும் எவனும் “கடவுள் சித்தத்தால்” என்பான். அவை இல்லாதவன்

அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால் கடவுள் சித்தம் என்பான். ஏனப்படியென்றால் என் கர்மம் என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக, மடையர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுளைக் காப்பாற்றுவதா?

யார் மனமும் புண்படாது

“உயர்” சாதிக்காரன் நலன் அனுபவிப்பவன், கடவுளைக் காப்பாற்றினால் - "தாழ்ந்த” சாதிக்காரன் கேடு அனுபவிப்பவன், கடவுளை ஒழிப்பது என்பதுதானே நியாயமும் நேர்மையும் ஆகும்; அறிவும் ஆகும்.

அப்படிக்கில்லையானால் அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்றுதானே சொல்லப்படவேண்டும்.

ஆகவே தோழர்களே!

கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே சிந்தியுங்கள்.உங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத்தன்மை, கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுப்படுத்துவதிலுந்தான் இருக்கிறது.

இதனால் யோக்கியமான, அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காக சிலர் ஆத்திரப்படலாம். மனம் புண்படுகிறது என்று சொல்லலாம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள்; நாம் யாரையும் மனம் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை; இதற்காக அறிவற்றவர்களால், சுயநலக்கார்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு ஏற்று மானத்தோடு பாய்ந்தெழுங்கள். யார் மீதும் வெறுப்பு - குரோதம் கொள்ளாதீர்கள்.

தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-36 -37

மன்னை முத்துக்குமார்
.
சாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா?

சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு - அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்...

...அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு ‘இந்திய மக்கள்' என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்திய தேசம்' என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம்.

ஆனால், இத்தகைய உணர்வு நிலைக்கு வருவது மிகவும் கடினம். அமெரிக்காவில் வந்தது போன்ற நிலைக்கு வருவது கடினம். மேலும், அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப் பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்.

நம் முன்னால் இருக்கும் சவால்கள் பற்றிய என்னுடைய பார்வை இது. இது, சிலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது. ஆனால், இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் என்பது, நீண்ட நாட்களாக ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. அதுமட்டுமல்ல; பெரும்பான்மை மக்கள் துன்பத்தைச் சுமந்து திரிந்தனர்; அவர்கள் அதற்கு இரையாகியும் போனார்கள். ஒரு சிலரின் ஆதிக்கம், அவர்களின் முன்னேற்றத்தைப் பறித்ததோடு, அவர்களின் முக்கிய வாழ்க்கையே மூழ்கிவிட்டது. இத்தகைய தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அடிமைகளாக இருந்து சோர்ந்து போய்விட்டனர். அவர்கள் மற்றவர்களால் ஆளப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே ஆள விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தன்னிலை உணர்ந்து, ஒரு வர்க்கப் போர் அல்லது போராட்டத்திற்குச் சென்றுவிடக் கூடாது. இதனால் நாட்டில் வேற்றுமைகள்தான் வளரும். அது ஒரு போரழிவுக்கான நாளாக அமைந்து விடும்.

ஆபிரகாம் லிங்கன் சரியாகச் சொன்னார்: "தங்களுக்குள்ளாகவே பிளவுபட்டுப் போராடும் ஒரு குடும்பம், நீண்ட நாட்கள் நீடித்திருக்காது.'' எனவே, இம்மக்களின் ஆதங்கம் எவ்வளவு சீக்கிரம் உணரப்படுகிறதோ, புரிந்து கொள்ளப்படுகிறதோ, ஆதிக்கம் செலுத்தும் அந்த சிலருக்கும், நாட்டுக்கும், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்கும், ஜனநாயகக் கூட்டமைப்பைத் தொடங்குவதற்கும் அது நல்லது. இது, வாழ்க்கையின் அனைத்துத் தளங்களில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதின் மூலமே சாத்தியமாகும். எனவேதான், நான் இதற்கு மிகுந்த அக்கறையும் அழுத்தமும் கொடுத்தேன்.

நான் இந்த அவையை மேலும் களைப்படைய வைக்கப் போவதில்லை. சுதந்திரம் என்பது, மகிழ்ச்சிக்கான ஒரு செய்தியே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நம்மீது பெரும் பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்று விட்டதால், இனிவரும் தவறுகளுக்கு நாம் ஆங்கிலேயர்களைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. இனி இங்கு நடைபெறும் தவறுகளுக்கு நம்மைத் தவிர வேறு எவரையும் குறைகூற முடியாது. பெரும் தவறுகள் நடக்கும் ஆபத்துள்ளது. நாட்கள் விரைந்து செல்கின்றன. புதுப்புது கொள்கைகளால் நம் மக்கள் உந்தப்படுகிறார்கள். அவர்கள் மக்களால் ஆளப்படும் அரசு என்பதில் சோர்வடைந்து விட்டனர். மக்களுக்கான அரசு அமைய அவர்கள் தயாராகி விட்டனர்.

மக்களால் மக்களுக்காக ஆளப்படும் அரசு என்று சொல்லப்பட்டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க விரும்பினால், நாம் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றப் பாதையில் உள்ள தீமைகளை அகற்றி, மக்களால் மக்களுக்கான அரசு அமைய மக்களைத் தூண்ட வேண்டும். நாட்டுக்குத் தொண்டாற்றுவதற்கு இதுதான் ஒரே வழி. இதைவிட மேலான வழி எனக்குத் தெரியவில்லை.

25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.




மன்னை முத்துக்குமார்
புத்தரா? காரல் மார்க்சா ?

புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563 இல் பிறந்தவர். காரல் மார்க்ஸ் கி.பி. 1818 இல் பிறந்தவர். மார்க்ஸ் புதிய தத்துவமான அரசியல், அரசியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறையை அமைத்துத் தந்தவர். மாறாக, புத்தர் ஒரு மதத்தைத் தோற்றுவித்ததைவிட அதிகம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் துளியும் தொடர்பில்லாதவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கட்டுரையின் தலைப்பு, "புத்தரா காரல் மார்க்சா'. இது, இவ்விருவரிடையே உள்ள ஒற்றுமையையும் முரண்பாடுகளையும் வெளிக்கொணர்கிறது. இவ்விருவரும் பல நூற்றாண்டு கால இடைவெளியால் பிரிக்கப்பட்டவர்கள்; மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு சிந்தனையைக் கொண்டவர்கள். எனவே, இவ்விருவரையும் ஒப்பிடுவது விந்தையாகக் கூட தோன்றலாம். புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுவது கண்டு மார்க்சியவாதிகள், எள்ளி நகையாடலாம். மார்க்ஸ் நவீன சிந்தனையாளர் எனவும், புத்தர் தொன்மையானவர் என்றும் கூட ஒதுக்கித் தள்ளலாம். அந்த வகையில், புத்தரை தங்களது தத்துவத்தைத் தந்த தலைவரோடு ஒப்பிடுவது, பிற்போக்கானது என்றும் புறந்தள்ளலாம்.

இதைத் தவிர, வேறு எத்தகைய ஒப்பீட்டை இவ்விருவரிடையே நம்மால் கொண்டுவர முடியும்? மார்க்சியவாதிகள் புத்தரிடம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? மேலும், புத்தருக்கும் காரல் மார்க்சுக்கும் இடையேயான ஒப்பீடு ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், பல புதிய பரிமாணங்களை விளக்குவதாகவும் அமையும். இரண்டு தத்துவங்களையும் படித்த மாணவன் நான். இரண்டு தத்துவங்களிலும் ஆர்வம் உள்ளவன் நான். இந்த ஆர்வம் புரிதலும், இவ்விரு தத்துவங்களையும் ஒப்பிடுமாறு என்னை வலிந்து உந்தியது.

மார்க்சியவாதிகள், திறந்த மனதோடு புத்தரையும் அவரது தத்துவங்களையும் ஆய்வுக்குட்படுத்தி புத்தர் எதற்காகப் போராடினார், எதைத் தன்னுடைய இலக்காக வகுத்துக் கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டால், தங்களது அணுகு முறையைக் கண்டிப்பாக மாற்றிக் கொள்வர். அதே நேரத்தில், புத்தரின் முழு தத்துவத்தையும் மார்க்சியவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், புத்தரின் கொள்கை, தங்களது மார்க்சியத்தின் கொள்கையினின்று பிற்போக்கானதில்லை என்பதை மட்டுமாவது அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி.

புத்தர் பொதுவாகவே "அகிம்சை' என்னும் தத்துவத்துடன் தொடர்புடையவராகப் போற்றப்படுகிறார். புத்தருக்கு அகிம்சை தத்துவமே முதன்மையானதும், இறுதியானதுமாக இருந்ததாக நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கப்பால், புத்தர் கற்பித்தவை மிகப் பரந்த அளவிலானது. இது பலருக்குத் தெரியாது. எனவே, புத்தரின் கொள்கைகளை இங்கு விரிவாகப் பட்டியலிட வேண்டிய தேவை இருக்கிறது. நான் "திரிபீடக'த்திலிருந்து (பவுத்த மறை நூல்) கற்றுணர்ந்ததை, இங்கு வகைப்படுத்தியுள்ளேன்.

1. சமயம், ஒரு சுதந்திர சமூகத்திற்கு இன்றியமையாதது.

2. ஏதோ ஒரு மதம் என்ற ரீதியில் மனிதர்கள் ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ கைக்கொள்ளலாகாது.

3. மதம் என்பது வாழ்வியல் உண்மைகளைத் தேட வேண்டும் மாறாக, கற்பனையான கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடாது.

4. மதத்தின் மய்யமாக, ஒரு போதும் கடவுள் இருக்கக் கூடாது.

5. ஆத்மா, சொர்க்கத்திற்குப் போவது ஆகியவை மதத்தின் இறுதி எல்லையாக இருக்கக் கூடாது

6. யாகங்களில் பலியிடுவதை அங்கீகரிப்பது மதமாகாது.

7. மதம், மக்களின் மனதில்தான் உயிர் வாழ்கிறது; சாத்திரங்களில் உயிர் வாழ்வதில்லை.

8. மனிதனும் ஒழுக்கமும்தான் மதத்தின் மய்யக் கருப்பொருளாக இருத்தல் வேண்டும். இல்லை எனில், மதம் என்பது கொடூரமான கற்பனையாகப் போய்விடும்.

9. மதத்தின் உச்சமாக ஒழுக்கம் அமைந்தால் மட்டும் போதாது, அவ்வொழுக்கம் தவிர்க்க வியலாத விதியாகப் போற்றப்பட வேண்டும்.

10. மதத்தின் தேவை, உலகை மறுகட்டமைப்புச் செய்வதாகும். உலக வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கூடியதாக அமைய வேண்டும். மாறாக, இல்லாத மறு உலகங்களை நோக்கித் திரிவதாக இருக்கக் கூடாது



"பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 441
மன்னை முத்துக்குமார்

என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்--அண்ண்ல் அம்பேத்கர்..

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது... நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் அழைக்கும் போது என்னால் வர இயலவில்லை. எனவே, நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். என்னுடைய உதவியின்றி, என்னை அதிகம் சார்ந்து நிற்காமல், நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

ஒரு மனிதன் 52 ஆவது வயதில் அரசியலைவிட்டு விலகிவிட வேண்டும். ஆனால், தற்காலத்தில் உள்ள அரசியல்வாதிகள், 55 வயதுக்குப் பிறகுதான் தங்களுடைய அரசியல் பணியைத் தொடங்குகிறார்கள்; அதற்குப் பிறகு அரசியல் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய ஒரே நோக்கம், தங்களின் சுயநலன்களுக்காக அரசியலில் இருந்து எதையாவது பெற முடியுமா என்பதுதான். எனக்கு எவ்வித சுயநல எண்ணங்களும் இல்லை. நான் என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே அரசியலில் இருக்கிறேன். நான் 1920 இல் அரசியல் வாழ்க்கையில் நுழைந்து, இன்றுவரை அதில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் என் சமூகத்திற்காக 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அரசியலிலிருந்து விடுபட விரும்பினாலும், என்னுடைய சமூகத்தை ஒன்றிணைப்பதற்கானத் தேவை என்னை அரசியலில் இருக்க கட்டாயப்படுத்துகிறது.

இந்த முப்பது ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் நான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். இவ்வளவு நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக யாரும் அரசியலில் இருந்திருப்பார்களா என்று எனக்குத் தெயவில்லை. நான் விரும்பியிருந்தால், கடைசிவரை அரசாங்கத்தின் பொறுப்பில் நீடித்திருக்க முடியும். நான் இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. எனக்கு இருந்த தகுதிகளுக்கு, நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இருந்திருக்கவில்லை. என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் தேவை ஏற்பட்டது. நான் எங்கு சென்றாலும், என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகப் பணியாற்றும் எண்ணத்தில் உறுதியாக இருப்பேன் என்று உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.

என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால், சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர், அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர, தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தை சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று "பாஸ்டர்' ஆகத் திரும்பினேன். நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2,000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால், நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும், நான் இப்பணியை ஏற்கவில்லை.

1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் "வைசிராய் நிர்வாகக் குழு'வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்தஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்.

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)


மன்னை முத்துக்குமார்

அடிமைகளாக வாழ விரும்புவோர் இதைப் படிக்க வேண்டியதில்லை

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.


மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும்,

தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர முடியாமல் போய்விடும்.

தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால், உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப் பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக் கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.

அவர்களுடைய கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது, அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும்.

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய உரை.


மன்னை முத்துக்குமார்
தீண்டாமை நீடித்திருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும்

முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.

பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய "மகர்' படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு "இரக்கமுடன்' நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?

தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது. முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் "பார்கவா' மற்றும் "சச்சார்' ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள். பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.

இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், "காங்கிரஸ்காரர்' அல்லது "நாகரிக மனிதர்' என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.


பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.

தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே, நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.

நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.


(27.10.1951ல் ஜலந்தரில் ஆற்றிய உரை)


மன்னை முத்துக்குமார்
நாத்திகனாகத் தயாராக இல்லாதவன் சமதர்மம் பேச முடியவே முடியாது

நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன. உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? கடவுளை நல்ல எண்ணத்தோடு கற்பிக்கவில்லை.





மன்னை முத்துக்குமார்
.
இன்று நாம் மக்களிடையில் பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிகைகளும், குருமார்கள் என்பவர்களும் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதையே முழு மூச்சாகக் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்

ஒழுக்கமா? பக்தியா?
பார்ப்பனத் தலைவரான ராஜாஜி அவர்கள், இன்று நேற்றல்லாமல் பல ஆண்டுகளாகவே, மக்கள் “கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்” என்பதையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி செய்து வருவதில் இவர்,”ஒழுக்கத்தைவிட பக்தியே முக்கியமானது” என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கட்கு இன்று பக்தியைப் பற்றி இவ்வளவு அக்கறை வந்ததன் காரணம் என்ன என்பதை மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

பக்தி ஆடுகிறது.

நம் நாட்டு மக்கள் இன்று ஏராளமாக அதாவது 100க்கு 50 பேருக்கு மேல் கல்வி அறிவு ஏற்படும்படி ஆக்கிய பின்பும், சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் ஏற்பட்ட பின்பும் பலமான பிரச்சாரம் நடந்து வருவதுடன் பெரும்பாலான மக்களுக்கு இயற்கையாகவே கடவுள், மத நம்பிக்கைகளில் பெரும் ஆட்டம் கொடுத்து விட்டது.

மாணவர்கள் இடையிலும் ஆதாரம் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இடையிலும், கடவுள், மத நம்பிக்கை பெரிதும் குறைந்து வருகிறது. இந்த மனித சமுதாயத்தில் இன்று இருந்துவரும் ஜாதிப் பாகுபாடு அடியோடு அழியும்படியான தன்மையை உண்டாக்கி வருகிறது.

மற்றொரு கேடு

இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரின் வாழ்வுக்கு கடவும், மதம் மாத்திரமல்லாமல், மற்றொரு ஆதாரமாயிருந்த அரசியலிலும் புகுந்து, பார்ப்பனரின் (சாதி) உயர்வுக்கு மற்றொரு கேட்டினையும் அளித்துவருவதாக ஆகிவிட்டது. எனவேதான், பார்ப்பனர்கள் நம் மக்களை கடவுள், மத, பக்தியின் பெயரால் முட்டாள்களாக ஆக்குவதிலும், கல்வியின் பெயரால் நம்மவர்களை தரமற்றவர், திறமையற்றவர் என்பதாக ஆக்குவதிலும் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

அதன் காரணமாகவே, இன்று பார்ப்பனர், பார்ப்பனத் தலைவர்கள், அவர்களது குருமார்கள், பார்ப்பனப் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவரும் பக்திப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டார்கள்.

எல்லாம் சுயநலம்

சாதாரணமாக “பக்தி” என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சைச் சுயநலமே ஒழிய, அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனும் இல்லை என்று நான் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கூறி வந்திருக்கிறேன்.

இது, பார்ப்பனரின் உயர் வாழ்வுக்கும், நம் இழிதன்மைக்குந்தான் பயன்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆகவே பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும், பயனற்ற தன்மையும் கொண்டது தான் என்பதை நம் மக்கள் இனிமேலாவது உணர வேண்டும்.

லஞ்சப்பேர்வழிகளின் பூசை

சமுதாயத்தில் பெரும்கேடு விளையக்காரணமாக இருப்பவர்களும் பெரும் லஞ்சம் பேர்வழிகளும் தான் பூசை, வணக்கம், பக்தி என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு பெரிதுபடுத்துவார்கள்; துள்ளிக் குதிப்பார்கள்.

அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானது தானே ஒழிய, மனிதர்களை ஒழுக்கமுடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் - சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக நம்பி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 34-35



மன்னை முத்துக்குமார்
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.


ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.

தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.

இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும்.

அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.
ஆகவே, இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள் சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.

(அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து)

மன்னை முத்துக்குமார்
இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே..


பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம் விளங்குகிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா'கத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.


ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்...

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)


மன்னை முத்துக்குமார்
.
மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன: 1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல் 2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல் 3. பொய் சொல்லாமல் தவிர்த்தல் 4. காமம் தவிர்த்தல் 5. மது தவிர்த்தல்.

உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:

1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த
நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை
5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.

உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது.

எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.

முதலாவது இடையூறு, தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.

இரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன.

செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது, எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.

மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும், அவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447

மன்னை முத்துக்குமார்
மதம் மாறக் கூடாது என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ­ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.

இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.

தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், வஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை


மன்னை முத்துக்குமார்
இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமான திராவிடர் கழகம் ஏன் துவக்கப்பட்டது என்பது இன்றும் பலர் மனதில் இருக்கும் வினா..

அந்த வினாவிற்க்கு விளக்கமாக அதன் நிறுவனர் தந்தை பெரியார் அவர்களே பேசும் அந்த ஒலிப்பேழை இதோ..கேளுங்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
.
திராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்? என்று தந்தை பெரியாரே கூறுகிறார்..கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்.. என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது...


பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது
5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?
எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?
அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?
அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே 9.2.1959 அன்று நிகழ்ந்த உரையாடல்.
மன்னை முத்துக்குமார்
.
புரட்சியாளர் விலாடிமிர் லெனின் உரையாற்றும் அபூர்வ காணொளி..

மன்னை முத்துக்குமார்
.

அண்ணலின் 53 வது நினைவு நாளான இன்று அந்த சமூக விடுதலை போராளியின் நினைவிடத்தில் நான்
மன்னை முத்துக்குமார்
.
கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.
சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள்.
அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் ,தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.