நாத்திகனாகத் தயாராக இல்லாதவன்.....

நாத்திகனாகத் தயாராக இல்லாதவன் சமதர்மம் பேச முடியவே முடியாது

நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன. உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? கடவுளை நல்ல எண்ணத்தோடு கற்பிக்கவில்லை.





ஒழுக்கத்தைவிட பக்தி முக்கியமானதா?

.

இன்று நாம் மக்களிடையில் பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிகைகளும், குருமார்கள் என்பவர்களும் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதையே முழு மூச்சாகக் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்

ஒழுக்கமா? பக்தியா?
பார்ப்பனத் தலைவரான ராஜாஜி அவர்கள், இன்று நேற்றல்லாமல் பல ஆண்டுகளாகவே, மக்கள் “கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்” என்பதையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி செய்து வருவதில் இவர்,”ஒழுக்கத்தைவிட பக்தியே முக்கியமானது” என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கட்கு இன்று பக்தியைப் பற்றி இவ்வளவு அக்கறை வந்ததன் காரணம் என்ன என்பதை மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

பக்தி ஆடுகிறது.

நம் நாட்டு மக்கள் இன்று ஏராளமாக அதாவது 100க்கு 50 பேருக்கு மேல் கல்வி அறிவு ஏற்படும்படி ஆக்கிய பின்பும், சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் ஏற்பட்ட பின்பும் பலமான பிரச்சாரம் நடந்து வருவதுடன் பெரும்பாலான மக்களுக்கு இயற்கையாகவே கடவுள், மத நம்பிக்கைகளில் பெரும் ஆட்டம் கொடுத்து விட்டது.

மாணவர்கள் இடையிலும் ஆதாரம் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இடையிலும், கடவுள், மத நம்பிக்கை பெரிதும் குறைந்து வருகிறது. இந்த மனித சமுதாயத்தில் இன்று இருந்துவரும் ஜாதிப் பாகுபாடு அடியோடு அழியும்படியான தன்மையை உண்டாக்கி வருகிறது.

மற்றொரு கேடு

இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரின் வாழ்வுக்கு கடவும், மதம் மாத்திரமல்லாமல், மற்றொரு ஆதாரமாயிருந்த அரசியலிலும் புகுந்து, பார்ப்பனரின் (சாதி) உயர்வுக்கு மற்றொரு கேட்டினையும் அளித்துவருவதாக ஆகிவிட்டது. எனவேதான், பார்ப்பனர்கள் நம் மக்களை கடவுள், மத, பக்தியின் பெயரால் முட்டாள்களாக ஆக்குவதிலும், கல்வியின் பெயரால் நம்மவர்களை தரமற்றவர், திறமையற்றவர் என்பதாக ஆக்குவதிலும் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

அதன் காரணமாகவே, இன்று பார்ப்பனர், பார்ப்பனத் தலைவர்கள், அவர்களது குருமார்கள், பார்ப்பனப் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவரும் பக்திப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டார்கள்.

எல்லாம் சுயநலம்

சாதாரணமாக “பக்தி” என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சைச் சுயநலமே ஒழிய, அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனும் இல்லை என்று நான் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கூறி வந்திருக்கிறேன்.

இது, பார்ப்பனரின் உயர் வாழ்வுக்கும், நம் இழிதன்மைக்குந்தான் பயன்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆகவே பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும், பயனற்ற தன்மையும் கொண்டது தான் என்பதை நம் மக்கள் இனிமேலாவது உணர வேண்டும்.

லஞ்சப்பேர்வழிகளின் பூசை

சமுதாயத்தில் பெரும்கேடு விளையக்காரணமாக இருப்பவர்களும் பெரும் லஞ்சம் பேர்வழிகளும் தான் பூசை, வணக்கம், பக்தி என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு பெரிதுபடுத்துவார்கள்; துள்ளிக் குதிப்பார்கள்.

அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானது தானே ஒழிய, மனிதர்களை ஒழுக்கமுடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் - சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக நம்பி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 34-35



அறிவாற்றல் இல்லையெனில்....

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.


ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.

தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.

இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும்.

அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.
ஆகவே, இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள் சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.

(அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து)

இரண்டு வர்க்கங்கள்தான் உள்ளனவா?

இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே..


பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம் விளங்குகிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா'கத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.


ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்...

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)



சடங்கு முறைகளைக் கைவிட வேண்டும்

.

மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன: 1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல் 2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல் 3. பொய் சொல்லாமல் தவிர்த்தல் 4. காமம் தவிர்த்தல் 5. மது தவிர்த்தல்.

உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:

1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த
நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை
5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.

உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது.

எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.

முதலாவது இடையூறு, தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.

இரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன.

செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது, எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.

மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும், அவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447

மதம் மாறுவது தான் சமூக விடுதலைக்கான ஒரே வழி....

மதம் மாறக் கூடாது என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ­ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.

இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.

தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், வஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை



திராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்?

இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமான திராவிடர் கழகம் ஏன் துவக்கப்பட்டது என்பது இன்றும் பலர் மனதில் இருக்கும் வினா..அந்த வினாவிற்க்கு விளக்கமாக அதன் நிறுவனர் தந்தை பெரியார் அவர்களே பேசும் அந்த ஒலிப்பேழை இதோ..கேளுங்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA

திராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்?

.
திராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்? என்று தந்தை பெரியாரே கூறுகிறார்..கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்...

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்.. என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது...


பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது
5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?
எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?
அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?
அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே 9.2.1959 அன்று நிகழ்ந்த உரையாடல்.

லெனின் --அபூர்வ காணொளி

.
புரட்சியாளர் விலாடிமிர் லெனின் உரையாற்றும் அபூர்வ காணொளி..

டாக்டர் அம்பேத்கர் 53 வது நினைவு தினம் :--

.

அண்ணலின் 53 வது நினைவு நாளான இன்று அந்த சமூக விடுதலை போராளியின் நினைவிடத்தில் நான்

மாவீரன் சுந்தரலிங்கம்..

.
கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்




பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.

சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள்.

அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் ,

தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.



1947


கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.

ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.

இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.

பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

IndiaPakisatan ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.

தமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.

1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.

ஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:

1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள்குழு 1
7. பொருளாதார உறவுகள்குழு 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10. ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.

1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.

இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:
1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்

வங்காள பவுண்டரி கமிஷன்:
1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.

இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.

1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.

ஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.

இடம்பெயர்தல்:

நடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.

ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
India2pak-train
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.
''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''

பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:

""பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.

காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.

நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?

ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.

பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.

உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.

அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.

வசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..



India2pak-kafila இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.

எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.

எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?

ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.

பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.

குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.

"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.

அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்?:

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

Violence 1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.

பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)

1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

Communal violence ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.


பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.

"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.

"அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

"அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.

தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.

தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

--------ச. தமிழ்ச்செல்வன்

கீழ்வெண்மணி-வண்கொடுமையின் உச்சம்

.
1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா

உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.
‘இந்து பத்திரிகை’

44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை பரவரோடு
குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

கீழ்வெண்மணி – மேலவளவு படிப்பினைகள்

---------------------- விடுதலைக் களம் - மேலவளவு நினைவிடம்

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை, சாதியப் போராட்டமாகவே உள்ளது. 1968 இல் தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டம், ஆண்டைகளின் சாதியத்தையும் மேலாதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. சாதிய அமைப்பின் அடித்தட்டிலுள்ள தலித்துகள் தங்களை எதிர்த்ததை செரித்துக் கொள்ள இயலாத, மேல்சாதியென கர்வம் கொண்ட ஆண்டைகள், இரக்கமற்ற முறையில் 25.12.1968 அன்று நடைபெற்ற கலவரத்தில் உயிர் தப்பிக்க, ஒரு சின்னஞ்சிறு குடிசையில் ஒடுங்கிய 44 தலித்துகளை தீயிட்டு எரித்துக் கொன்றனர்.

இவ்விரக்கமற்ற படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண (நாயுடு)வும் பிறரும் 1970 இல் குற்றவாளிகள் என நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண (முதலியார்) தீர்ப்புரைத்தபோதும், “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று கூறி, 1975இல் வழக்கிலிருந்து விடுதலை செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகராஜன். “ஏழைச் சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்வழக்கு எவ்வளவு உண்மையானது என்பதை அனைவரும் உணர்ந்த தருணம் அது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. கால வெள்ளத்தின் ஓட்டத்திலும் நீதி மனம் கொண்டவர்களுக்கு, அது ஓர் ஆறாத வடுவாக என்றும் நெஞ்சில் நிலைப்பெற்றிருக்கிறது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த தலித்துகளின் விடுதலை உணர்வு, 1989 இல் ‘பட்டியல் சாதியினர் மற்றும பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம்' இயற்றப்பட்ட பின்னணியிலும், அதன் பின்னர் 1990 இல் தொடங்கிய மாமனிதர் அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் வலுவடைந்தது. 1992 இல் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் தொடர்பான 73 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதை நடைமுறைப்படுத்த இயற்றப்பட்ட மாநிலப் பஞ்சாயத்து சட்டங்களும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தின.

தமிழகத்தில் 1994இல் இயற்றப்பட்ட தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டப்படியான ஊராட்சி அமைப்புகளின் தேர்தல், 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட அளவிலான ஊராட்சி அமைப்புகளில் தலைவர் பதவி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வகையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது நாள்வரை தலைவர் பதவியை அனுபவித்து வந்த அம்பலக்காரர் சமூகத்தினர் இந்த ஒதுக்கீட்டை ஏற்க மறுத்தனர். தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது,

இரண்டு முறை அம்பலக்கார சமூகத்தினர் கலவரம் ஏற்படுத்தி தேர்தல் நடைபெறவிடாமல் தடுத்தனர். இதில் ஒருமுறை வாக்குப் பெட்டியையே தூக்கிச் சென்றுவிட்டனர். மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் தலித் மக்களைப் பங்கேற்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு உறுதியளிப்புகளுடன் வேண்டியதன் பேரில் போட்டியிட்ட முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய தேர்தல் கலவரத்தில் ஆதிக்கச் சாதியினரால் தீ வைத்து பாழ்படுத்தப்பட்ட தலித் மக்களின் குடிசை வீடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, 30.06.1997 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு மேலவளவு நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், முருகேசனின் தம்பி ராஜா உட்பட 6 பேர் மேலவளவுக்கு அருகே நெருங்கும்போது, பேருந்தை வழிமறித்த 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய அம்பலக்காரர்களின் வன்முறைக் கும்பலால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.

முருகேசனின் தலை தனியே துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. “தலை இருந்தால்தானே தலைவனாக இருக்க முடியும்; தலைவனாக வரும் எந்த தலித்தின் தலையும் தப்பாது” என்பதுதான் கொலையாளிகளின் செய்தியாக இருந்தது.

இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் என 40 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முன்பும், வழக்கு விசாரணையின்போதும், அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அம்மேல் முறையீடுகளின் மீதான விசாரணையின்போதும் இவ்வழக்கை வலுவிழக்கச் செய்ய ஆதிக்க சாதியினர் கையாண்ட சூழ்ச்சிகள் பலப்பல. அவர்களின் பொருளாதார, ‘சமூக' பலம் இச்சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்தது.

நீதித்துறையும் இச்சூழ்ச்சிகளுக்குத் தப்பவில்லை. இச்சூழ்ச்சிகளையெல்லாம் காலவரிசைப்படி தொகுத்து விளக்கி வழக்குரைஞர் குழு ‘நீதியைத் தேடும் மேலவளவு வழக்கு' என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை, தலித் முரசில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில் 17 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 23 நபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் 26 சூலை 2001 அன்று தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 17 நபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தனர்.

வழக்குச் சம்பவத்தில் காயமடைந்த தலித் மக்களின் சார்பில் 23 நபர்களின் விடுலையை எதிர்த்தும், அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சார்த்தப்பட்ட ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை' என்ற விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தும் குற்றவியல் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை ஒருங்கே விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி. சதாசிவம் (தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் என். பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய ஆயம் 19.04.2009 அன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

வழக்கில் விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், இப்படுகொலை சாதியப் பகைமையின் பின்னணியில்தான் நிகழ்ந்துள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும், விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தண்டிக்காமல் விடுவித்தது. இது குறித்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யாததாலும், சம்பவம் நிகழ்ந்து முழுமையாக 9 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்நிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட விரும்பவில்லை என்று கூறி உயர் நீதிமன்றம், காயமடைந்தோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 17 குற்றவாளிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர் 22.10.2009 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம், உயர் நீதிமன்றம் உறுதி செய்த விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து, குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வழக்கில், சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் வரிசை எண்ணில் முரண்பாடு இருப்பதால், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை முன்நிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுத் தரப்பு முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டதால், வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொய்யாகத் தயாரிக்கப்பட்டதாகவும் எனவே, வழக்கின் அடிப்படையே அய்யத்திற்குரியதாக உள்ளதாகவும் தண்டிக்கப்பட்டோர் சார்பில் வாதிடப்பட்டது.

முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற படுகொலை என்ற அடிப்படையிலும், இச்சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய குழப்பச் சூழ்நிலையையும், இப்படுகொலை ஏற்படுத்திய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, முதல் தகவல் அறிக்கைப் புத்தகம் முன்னிலைப்படுத்தப்படாத ஒரே காரணத்திற்காக இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதம் சரியல்ல; ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் இவ்வாதத்தை நிராகரித்துள்ளது.

மேலும், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத சூழ்நிலை மற்றும் காரணங்களை விளக்கி, காவல் துறை உயர் அலுவலர் ஆணையுறுதிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை உள்நோக்கத்துடன் மறைத்து வைத்திருக்கவும் வாய்ப்புள்ளபடியால் இத்தகைய வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், குற்ற சம்பவம் நடைபெற்றது குறித்து வருவாய்த் துறை அலுவலர்களான மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர், அரசுக்கு அனுப்பியிருந்த அறிக்கைகளில் சில குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறாததால், அவர்கள் பின்னர் பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

வருவாய்த்துறை அலுவலர்கள் புலன் விசாரணை அதிகாரியுடன் இணைந்து செயல்பட்டு அந்தப் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த அறிக்கையை கருத முடியாது என்று கூறி, இவ்வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

கீழ்வெண்மணி வழக்கிலிருந்து மேலவளவு வழக்கு வரையிலான நீதிக்கான பயணம் நீண்ட நெடியதாகவும், பல்வேறு எதிர்ப்புகளையும் சவால்களையும் துரோகங்களையும் சந்தித்தாக அமைந்துள்ளது.

கீழ்வெண்மணி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள் திறம்பட செயல்பட்டபோதிலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு மேலெடுத்துச் செல்லப்படவில்லை. ஆனால், மேலவளவு வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலிருந்து விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன.

அவை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர். வெங்கட்ரமணியின் அலுவலகம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிற்சில காரணங்களினால் அம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தனியாக இனி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேபோல், மேலவளவு வழக்கில், தொடக்கக் கூட்டம் முதலே, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தின் ஒருங்கிணைப்பில் சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கத் தோழர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட மேலவளவு பகுதி மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழக்கை இந்த அளவில் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆளுங்கட்சி மாற்றங்களுக்கிடையேயும்கூட அரசுத் தரப்பு இவ்வழக்கில் போதிய குறைந்தபட்ச முனைப்பைக்கூட காட்டவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும், அரசுத் தரப்பில் முன்னிலையான சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்று, இப்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றும் வி. கனகராஜ் அவர்களை நியமித்தது பெரும் நல்வாய்ப்பாக அமைந்ததைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அவரது சமூக அக்கறை உணர்வும் இவ்வழக்கில் பெருமளவுக்குத் துணை புரிந்துள்ளது. இந்த சட்டப் போராட்டத்தில் பங்களித்த அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியவர்கள் என்பதோடு, மேலவளவு வழக்கின் முடிவு இனிவரக்கூடிய காலங்களில் வன்கொடுமை வழக்குகளுக்கான போராட்டத்தின் தொடக்கமே என்பதை உணர்ந்து சமூக, மனித உரிமை, தலித் உரிமை ஆர்வலர்களும் செயல்பாட்டாளர்களும் செயல்பட உறுதி ஏற்பதே மேலவளவு தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாக அமையும்!

மேலவளவு வழக்கில் பங்களித்தோர்

மேலவளவு வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக நடத்த, அவர்களது கோரிக்கைப்படி நியமிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பி. திருமலைராஜன், சிறப்பு அரசு குற்றத் துறை வழக்குரைஞராகவும், அவருக்கு உறுதுணையாக இன்னொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையைத் திறம்பட நடத்தினர். வழக்கின் சாட்சிகளுக்கு வழிகாட்டியும் ஊக்குவித்தும் வழக்கை வலுவடையச் செய்த வழக்குரைஞர்கள் கு.ஞா. பகத்சிங் மற்றும் ரா. அழகுமணி அவர்களுடன் சென்னகரம்பட்டி பெருமாள், மேலூர் தேவனாண்டி ஆகியோரும் சாட்சிகளுக்கு துணிவூட்டினர்.

வழக்கு விசாரணை சேலத்தில் நடைபெற்றபோது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊக்குவித்தவர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக கட்டணமின்றி முன்னிலையாகி வாதாடியவர், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் வி. கோபிநாத். வழக்கு விபரங்களில் அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள் வழக்குரைஞர் டாக்டர் வி. சுரேஷ் மற்றும் வி. கோபிநாத் அவர்களின் இளம் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்தியன். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

Bookmark and Share