மன்னை முத்துக்குமார்
.
ராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ, ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேலோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்கு பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேலோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

ராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே ராமாயணம்.

ராமனின் சின்னப்புத்தி: தம்பி வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்! ‘அந்தரங்க மித்திரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சுவாதீனமற்று பிரலாபித்தார்' (பக்கம் 2) காமம் வாட்டுகிறதே ‘சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பல வித பட்சிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது' (பக்கம் 4) இங்கேதான் இன்பம் அனுபவித்தோம். ‘முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, இந்தப் பட்சியின் சப்தத்தைக் கேட்டு ஆசை மிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள். ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது' (பக்கம் 5)

ஆனாலும் அவள் எண்ணங்கள் என்னிடம்தான். ‘சீதையின் மனதும் பிராணனும் எண்ணங்கள் யாவும் என்னிடத்திலேயே வேரூன்றி இருக்கின்றன. சீதையுடன் சேர்ந்திருக்கும் பொழுது எனக்கு மிகுந்த சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது, இந்த காற்றேயல்லவா?' சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன். ‘அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சுகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்க மாட்டேன்.'

இவ்விதம் ராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ - அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காண முடியவில்லை. இதனால், பார்ப்பனக் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.

ராமன் ஓர் இடத்தில், "நான் அயோத்தியில் இருக்கும்போது ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே'' என்ற கருத்தில் துக்கப்படுகிறான்.

ஆகவே, ராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் ராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது! மேலும், ராமன் காட்டுக்கு வந்தது சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பான் என்றும் தெரிகிறது. இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும் கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறதென்பதைச் சிந்தியுங்கள்.

மேலும், இப்படி அவன் பிதற்றும்பொழுது தன்னை அறியாமலே தன்னை ‘அலி' என்பதையும் ஓர் இடத்தில் ஒப்புக் கொள்ளுகிறான். ஆரண்யகாண்டம் 64ஆவது சர்க்கத்தில் ராமன் கூறுகிறான், ‘என்னை வீரியமற்றவன், கையாலாகாதவன் என்று அவமதிக்கிறார்கள்' என்று பிறர் தன்னைப் பேடி என்று கூறுகிறார்களே என்று வருத்தமுறுகிறான். இப்படி ராமன் தன்னைப் பேடி என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை எப்படியும் மறைக்க வேண்டும் என்பதற்காக ஆண்மையுள்ளவன் போல் பிதற்றுகிறான். எனவே, ராமன் பேடி என்பதில் அய்யமில்லை.

(அனைத்து ஆதாரங்களையும் கொண்டு தொகுக்கப்பட்ட - 'ராமாயணக் குறிப்புகள்' நூலிலிருந்து)